search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலமேடு அருகே விவசாயி கழுத்தை அறுத்து கொலை- போலீசார் தீவிர விசாரணை
    X

    பாலமேடு அருகே விவசாயி கழுத்தை அறுத்து கொலை- போலீசார் தீவிர விசாரணை

    • கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
    • முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 65). விவசாயி. இவர் நேற்று இரவு தனது தோட்டத்திற்கு சென்றார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. மழை பெய்ததால் அவர் வரவில்லை என்று குடும்பத்தினர் அங்கு சென்று பார்க்கவில்லை.

    இந்த நிலையில் நல்லதம்பி இன்று காலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி நல்லதம்பியின் மகன், பாலமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட நல்லதம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்பநாய் மூலம் துப்புதுலக்கப்பட்டது.

    இந்த கொலை எதற்காக நடைபெற்றது? என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பாலமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×