என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் நள்ளிரவில் பிரிண்டிங் கடையின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை
    X

    ஈரோட்டில் நள்ளிரவில் பிரிண்டிங் கடையின் பூட்டை உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை

    • ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாச்சிப்பா வீதியில் பிரிண்டிங் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு போஸ்டர் டிசைன், பிரிண்டிங், பேனர் டிசைன், திருமண பத்திரிக்கை டிசைன், லேசர் கட்டிங் மற்றும் அனைத்து வகையான டிசைன்கள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பிரிண்டிங் கடை அருகே குடோனும் செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் புஷ்பநாதன் (74). இவர் ஈஸ்வரன் கோவில் அருகே தெப்பக்குளம் வீதியில் வசித்து வருகிறார். இந்த கடை கடந்த 15 வருடமாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு மேலாளர், பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடையின் மேல் தளத்தில் உரிமையாளர் அறையும், கேசியருக்கான அறையும் உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் கதவை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை கடையில் வேலை பார்க்கும் ஊழியர் கடை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இது குறித்து உரிமையாளர் புஷ்பநாதனுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர் உள்ளே சென்று பார்த்த போது கள்ளாப்பெட்டி திறந்து இருந்தது. மற்றும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறை, கேசியருக்கான அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. 2 அறையிலும் இருந்த கள்ளாப்பெட்டி சாவியை திறந்து ரூ.3 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த கடை மற்றும் அருகே உள்ள குடோன் வரை ஓடி சென்று திரும்பி வந்துவிட்டது.

    போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது இன்று நள்ளிரவு 2.20 மணி அளவில் மர்ம நபர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வது பதிவாகியுள்ளது.

    சி.சி.டி.வி. கேமிராவில் தனது முகம் பதிவாகாமல் இருப்பதற்காக அவர் முகத்தில் துணி வைத்து மறைத்து இருந்தார். பின்னர் 3 மணிக்கு அந்த நபர் கடையில் இருந்து வெளியே செல்வது பதிவாகியுள்ளது. கடையில் எந்தெந்த இடத்தில் பணம் இருந்துள்ளது என்பது அந்த நபருக்கு நன்றாக தெரிந்துள்ளது.

    எனவே இந்த கடையை பற்றி நன்கு தெரிந்தவர் தான் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் சந்தேகிக்கின்றனர்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×