என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
- நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.
இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 10-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நெஸ்பேக் 30 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.80 மட்டுமே கிடைக்கும்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-435, பர்வாலா-382, பெங்களூர்-410, டெல்லி-400, ஹைதராபாத்-363, மும்பை-420, மைசூர்-410, விஜயவாடா-385, ஹொஸ்பேட்-370, கொல்கத்தா-435.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.92 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 72 ஆக நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.






