என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை?
- திவேஸ்மேரி அணிந்திருந்த தங்கசங்கிலி, வளையல்கள் உள்ளிட்ட நகைகள் காணவில்லை.
- போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சந்தியாகு மகள் திவேஸ்மேரி(62). இவருக்கு திருமணமாகாததால் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டைஒட்டி தபால் நிலையம் மற்றும் தோட்டங்கள் உள்ளது. வழக்கமாக காலையில் அவரது உறவினர் திவேஸ்மேரி வீட்டிற்கு பால் வினியோகம் செய்ய செல்வார்.
இன்று காலை வழக்கம்போல் அவரது வீட்டிற்கு சென்றபோது கதவு திறக்கப்படவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு திவேஸ்மேரி இறந்துகிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திவேஸ்மேரி அணிந்திருந்த தங்கசங்கிலி, வளையல்கள் உள்ளிட்ட நகைகள் காணவில்லை. மேலும் வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை நகைக்காக மர்மநபர்கள் கொன்றனரா? என சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே திவேஸ்மேரி எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும்.






