search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ டிரைவரை தாக்கியதை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவரை ஓட, ஓட விரட்டி தாக்கிய ரவுடி கும்பல்
    X

    ஆட்டோ டிரைவரை தாக்கியதை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவரை ஓட, ஓட விரட்டி தாக்கிய ரவுடி கும்பல்

    • பொன்னேரி பகுதியில் கத்தியுடன் ரவுடி கும்பல் பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி தாக்குவது அதிகரித்து உள்ளது.
    • ரவுடிகள் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் மாதா சிலை அருகில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திருவேங்கடபுரம் பள்ளி அருகே ஆட்டோவில் வந்த டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி திடீரென தாக்கினர்.

    இதனை அவ்வழியே வந்த கல்லூரி மாணவர் ஒருவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் மாணவரை ஓட, ஓட விரட்டி தாக்கினர். மேலும் கத்தியாலும் திருப்பி பிடித்து சரமாரியாக அடித்தனர். இதில் பலத்த காயம் அடைந்த மாணவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சாலையில் சென்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயம் அடைந்த மாணவருக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த தாக்குதல் தொடர்பாக இன்று காலை 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில வாரங்களாக பொன்னேரி பகுதியில் கத்தியுடன் ரவுடி கும்பல் பொதுமக்கள், வியாபாரிகளை மிரட்டி தாக்குவது அதிகரித்து உள்ளது. அவர்கள் மீது புகார் கொடுத்தாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதனால் ரவுடிகள் மீது புகார் கொடுக்க பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×