search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவர் மரணம்- தவறான சிகிச்சையால் இறந்ததாக குடும்பத்தினர் புகார்
    X

    தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவர் மரணம்- தவறான சிகிச்சையால் இறந்ததாக குடும்பத்தினர் புகார்

    • மாணவர் கார்த்திக் இறந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரி இளவரசி புகார் அளித்தார்.
    • இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்தவர் காளையப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 19). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த வாரம் கார்த்திக்குக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர்களது ஊர் விருதுநகர் மாவட்டத்தின் அருகில் இருக்கிறது. இதனால் கார்த்திக்கை அவரது குடும்பத்தினர், ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை அந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.

    நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அறுவை சிகிச்சை அறையில் இருந்து தீவிர சிகிச்சை வார்டுக்கு மாற்றுவதற்காக கார்த்திக்கை அழைத்துச் சென்றுள்ளனர்.

    அப்போது அவர் அசைவின்றி படுத்திருப்பதை பார்த்து அவரது சகோதரி இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி கேட்டபோது, மயக்க நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் சகோதரி மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையளித்ததால் அவர் இறந்ததாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மாணவர் இறந்த ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு கார்த்திக்கின் உடலை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவர் கார்த்திக் இறந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரி இளவரசி புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×