என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல்
- துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த முருகன்.
- ரூ.25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த கடலூரைச் சேர்ந்த முருகன் (வயது 36) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அவரது பேண்டில் அணிந்து இருந்த பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதுபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் உள்ள கழிவறையில் கேட்பாரற்று கிடந்த பார்சலில் தங்கம் இருந்ததை கண்டனர். ரூ.9 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 220 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






