search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் 20 ரூபாய் உயர்வு
    X

    கறிக்கோழி விலை ஒரே வாரத்தில் 20 ரூபாய் உயர்வு

    • புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர்.
    • ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இதே போல தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 25 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    குறிப்பாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மா நிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் (பிசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர். இதனால் ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

    மேலும் விலையும் படிப்பாடியாக சரிந்து வந்தது. இதனால் கறிக்கோழி விலை மேலும் சரியும் என்று பொது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக விலை உயர்ந்து வருகிறது .

    புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி உற்பத்தியை பண்ணையாளர்கள் குறைத்தனர். இதனால் கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்பட்டது . இதையடுத்து கறிக்கோழி விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் மொத்த விலை கடந்த வாரம் (உயிருடன்) ஒரு கிலோ ரூ.86 ஆக இருந்த நிலையில் தற்போது 6 ரூபாய் உயர்ந்து ரூ.92 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சில்லரை விற்பனை கடைகளில் கறிக்கோழி ஒரு கிலோ கடந்த வாரம் 180 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்ததாக கறிக்கோழி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த வாரம் 4.30 காசுக்கு விற்பனையான முட்டை விலை தற்போது மேலும் 20 காசுகள் குறைந்து 4.10 காசுக்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×