search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கர்நாடகாவில் விற்ற தாய்- டாக்டர்கள் புகாரால் போலீசார் மீட்டனர்
    X

    கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கர்நாடகாவில் விற்ற தாய்- டாக்டர்கள் புகாரால் போலீசார் மீட்டனர்

    • சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

    ஆம்பூர்:

    குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.

    அப்போது பெண்ணுக்கும், அவரது அக்கா கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு பழகி வந்தனர்.

    இதில் கர்ப்பமான பெண்ணை அவரது உறவினர்கள் கடந்த 23-ந்தேதி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு நேற்று முன்தினம் இரவு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மற்றும் அவரது தாய் நேற்று காலை திடீரென அங்கிருந்து மாயமாகி விட்டனர்.

    சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் உமராபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் பெண்ணின் செல்போன் எண் சிக்னலை வைத்து தேடினர்.

    பெண் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கே.ஜி.எப். விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அங்கு குழந்தையின் தாய் குழந்தையை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு, பெண் மற்றும் அவரது உறவினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஆஸ்பத்திரியிலிருந்து குழந்தை மற்றும் அவரது தாய் திடீரென காணாமல் போனதால் அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினோம்.

    பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து பெண் ஆம்பூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.

    அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கர்ப்பமானார். பெண்ணை அவரது உறவினர்கள் கேலி கிண்டல் செய்வார்கள் என பயந்தனர்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

    இதுகுறித்து பெண், அவரது உறவினர்களிடம் என் அண்ணனுக்கு பயந்து நான் குழந்தையை வேறொரு நபரிடம் கொடுத்துள்ளேன் எனக்கூறி நாடகமாடி உள்ளார்.

    பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்ததில் குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்டு அவரிடம் ஒப்படைத்ததோடு அறிவுரைகள் வழங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×