search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
    X

    கடலூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

    • தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்மநபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது.
    • முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47). இவரது மனைவி சரளா (44). இவர்கள் 2 பேரும் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மதுமிதா, ஜனனி ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளன.

    நேற்று இரவு இவர்கள் வீட்டின் இரும்பு கதவை பூட்டி விட்டு மெயின் கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரையை போட்டிருந்தனர்.

    இவர்கள் அனைவரும் ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. சற்று நேரத்தில் மின்சாரம் வந்தது. அந்த சமயத்தில் வீட்டிற்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது.

    முருகானந்தம் வீட்டில் இருந்த மின் விசிறி ஏற்கனவே பழுதாகி இருந்தது. எனவே, மின் விசிறிதான் வெடித்து இருக்கும் என நினைத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    சற்று நேரத்தில் மீண்டும் பயங்கர சத்தம் கேட்டது. உடனே 4 பேரும் பயந்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது வீட்டு வாசலில் சணல், சிறிது சிறிதான ஆணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருந்த திரை சிலையும் கருகி இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்மநபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் அங்கு வந்தார். அவர் முருகானந்தம், அவரது மனைவி சரளா மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தினார்.

    உங்கள் குடும்பத்தினருடன் யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு சிதறி கிடந்த சணல், ஆணிகளை கைப்பற்றி பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

    அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் முருகானந்தம் வீட்டுக்கு வந்தவர்கள் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

    முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×