என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது
    X

    வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது

    • யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.
    • ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர், காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரேஸ்மிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விருதுநகரை சேர்ந்த மதி முத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் (வயது 38). உதவி மேலாளராக வேலை செய்து வந்தார்.

    அவர் காட்பாடி வி.ஜி. ராவ் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். யோகேஸ்வர பாண்டியன் ஆன்லைனில் ரம்மி விளையாடியதால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார்.

    இதனால் இவரது வங்கியில் கல்வி கடன் வாங்கியவர்கள் செலுத்திய பிரிமியம் பணத்தை மோசடியாக கணக்கு எழுதி இவரது கனரா வங்கி மற்றும் பரோடா வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார்.

    கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி முதல் 2021 ஜூலை மாதம் வரை மொத்தம் 137 வாடிக்கையாளர்களின் வங்கி பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.

    வங்கி கணக்கில் பிரிமியம் தொகை செலுத்தியவர்களுக்கு பணம் வராததால் இது குறித்து வங்கி மேலாளர் சிவக்குமாரிடம் வாடிக்கையாளர்கள் புகார் செய்தனர். வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் யோகேஸ்வர பாண்டியன் ரூ.34 லட்சத்து 10 ஆயிரத்து 622 கையாடல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் சிவகுமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சாரதி இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து யோகேஸ்வர பாண்டியனை கைது செய்தனர்.

    ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×