search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர். டவுண் ரெயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 3 நிமிடம் நின்று செல்லும்- தென்னக ரெயில்வே தகவல்
    X

    நாகர். டவுண் ரெயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 3 நிமிடம் நின்று செல்லும்- தென்னக ரெயில்வே தகவல்

    • டவுண் ரெயில் நிலைய வழியாக வருகிற 20-ந்தேதி முதல் ரெயில் இயக்கப்படுவதையடுத்து முன்கூட்டியே ரெயில் சென்றடையும்.
    • டவுண் ரெயில் நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதை அடுத்து டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்து மீண்டும் டவுண் ரெயில் நிலையம் வழியாக கொல்லத்திற்கு புறப்பட்டு செல்கிறது. இதனால் கூடுதல் நேரம் ஏற்படுவதாகவும் இந்த ரெயிலை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் டவுண் ரெயில் வழியாக இயக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதையடுத்து தென்னக ரெயில்வே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் டவுண் ரெயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என்றும் தென்னக ரெயில்வே கூறி உள்ளது.

    சென்னையிலிருந்து மாலை புறப்படும் இந்த ரெயில் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்து சேரும். பின்னர் இங்கிருந்து 9.15 மணிக்கு தான் ரெயில் புறப்பட்டு சென்றது. டவுண் ரெயில் வழியாக இந்த ரெயில் இயக்கப்படும்போது 45 நிமிடம் முன்னதாக கொல்லம் ரெயில் நிலையத்திற்கு சென்று சேரும். இதே போல் கொல்லத்தில் இருந்து தினமும் மாலை புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 5.55 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் 6.05 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

    டவுண் ரெயில் நிலைய வழியாக வருகிற 20-ந்தேதி முதல் ரெயில் இயக்கப்படுவதையடுத்து முன்கூட்டியே ரெயில் சென்றடையும். டவுண் ரெயில் நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதை அடுத்து டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் கிடையாது. எனவே பொதுமக்கள் வசதிக்காக டவுண் ரெயில் நிலையத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    முதல் கட்டமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுண் ரெயில் வழியாக இயக்கப்படுவதை தொடர்ந்து திருவனந்தபுரத்திலிருந்து சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்லும் ரெயிலையும் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். டவுண் ரெயில் நிலையம் வழியாக ரெயில்களை இயக்க ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பலதரப்பு மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×