search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனை

    • பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் தற்போது ஏராளமான கோவில் கொடை விழாக்களும் நடைபெற்று வருகிறது.
    • இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்று மேலப்பாளையம் கால்நடைசந்தை ஆகும்.

    இங்கு ஆடுகளுடன், மாடு, கோழி, கருவாடும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100-க்கணக்கான வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சந்தையில் கூடுவார்கள்.

    மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வாரந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக விற்பனை நடைபெறும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் தற்போது ஏராளமான கோவில் கொடை விழாக்களும் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    அவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டமும் அலைமோதியது. இதனால் சந்தை களைகட்டி காணப்பட்டது. இன்று சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    ஆடுகள் தரத்திற்கேற்ப அவை விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    எட்டயபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வெள்ளாடு ஒன்று அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையானது.

    இதேபோல் வியாபாரிகள் பலரும் மொத்தமாக ஆடுகளை வாங்கி சென்றனர். பொதுமக்களும் தங்களுக்கு ஏற்ற ஆடுகளை வாங்கினர். இதனால் விற்பனைக்கு வந்த அனைத்து ஆடுகளும் விற்று தீர்த்தன.

    கால்நடை சந்தையில் இன்று ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

    அதன்பேரில் பொதுமக்களும், வியாபாரிகளும் முககவசம் அணிந்து சென்றனர்.

    Next Story
    ×