search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலை தாய் எதிர்த்ததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
    X

    காதலை தாய் எதிர்த்ததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    • கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாணவிக்கு பிறந்தநாள் வந்தது.
    • காதலன், மாணவியுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் தா.பேட்டை வடக்கு குறும்பர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது மனைவி சுபாஷினி (வயது 38). இவர் முசிறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகள் இருந்தார்.

    இவர் துறையூர் திருத்தலையூர் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் (தாயின் அம்மா) தங்கி அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிப்ளமோ படிக்கும் 17 வயது சிறுவன் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. காலப்போக்கில் அதுவே காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

    இதுபற்றி அறிந்த மாணவியின் தாயார் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மகளிடம் அறிவுரையாக கூறினார். இது படிக்கும் வயசு, காதல் எல்லாம் வேண்டாம். எனவே காதலை கைவிடுமாறு வற்புறுத்தினார். ஆனால் காதல் மயக்கத்தில் இருந்த மாணவிக்கு அது காதில் ஏறவில்லை.

    இதற்கிடையே கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாணவிக்கு பிறந்தநாள் வந்தது. அப்போது காதலன், அந்த மாணவியுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுபாஷினி மீண்டும் மகளை கண்டித்தார்.

    இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் கொக்கியில் தனது தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருந்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அந்த மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுபாஷினி தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×