search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி பள்ளியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை தின்ற மாணவி உயிரிழப்பு
    X

    நகராட்சி பள்ளியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை தின்ற மாணவி உயிரிழப்பு

    • மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • ஊட்டியை சேர்ந்த சலீம் என்பவரது மகளான ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தமிழக சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந்தேதி சத்து மாத்திரை கிடைத்துள்ளது. அப்போது யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என மாணவ-மாணவிகள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள், 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அந்த மாத்திரையை சாக்லெட் சாப்பிடுவது போன்று போட்டி போட்டு 30 முதல் 60 வரை மாத்திரைகள் சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயங்கி விழுந்த 6 பேரும் ஊட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு, ஊட்டியை சேர்ந்த சலீம் என்பவரது மகளான ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அந்த மாணவி ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் சேலம் தாண்டி வரும்போது அந்த மாணவிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மற்றொரு மாணவியின் உடல் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை வினியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் சம்பவம் நடந்த கடந்த 6-ந்தேதி கலைவாணி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்றும், பள்ளிக்கூட பீரோவில் இருந்த மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

    மாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்த மாணவி ஜெய்பா பாத்திமாவின் தாயார் அஷ்மா, மாணவி படித்த அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சம்பவம் தொடர்பாக ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×