search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடு வளர்ப்போர் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அ.தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் வலியுறுத்தல்
    X

    மாடு வளர்ப்போர் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அ.தி.மு.க. கவுன்சிலர் டாக்டர் கே.கார்த்திக் வலியுறுத்தல்

    • இளைய தலைமுறையினர் பால் கறப்பதையே விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
    • சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளுக்கும் புளியந்தோப்பில் ஒரே ஒரு இறைச்சி வெட்டும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது இது போதுமானது அல்ல.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட் அறிக்கை மீது அ.தி.மு.க. மாமன்ற குழு செயலாளர் டாக்டர் கே. கார்த்திக் பேசியதாவது:-

    இந்த பட்ஜெட்டில் மாமன்ற உறுப்பினர் நிதியை 30 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தி உள்ளீர்கள் பாராட்டுக்கள். ஆனால் இந்த 40 லட்சத்தையும் நாங்கள் முழுவதாக செலவு செய்ய முடிவதில்லை.

    ஏனென்றால் இதில் ஜிஎஸ்டி 7 லட்சம் போய் விடுகிறது மேலும் டெண்டர் விட்டு நாம் பணிகளை ஒதுக்குவதால் அதிலும் குறைந்து விடுகிறது. அதனால் அந்த ஜிஎஸ்டி தொகைக்கு ஈடாக தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும். அப்படி கொடுத்தால் நாங்கள் முழுமையாக 40 லட்சத்தையும் பயன்படுத்த முடியும். சுகாதாரத்தை பேணும் வகையில் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து உள்ளீர்கள். தெருவில் திரியும் நாய் மற்றும் மாடுகள் பிடிக்க கூடுதலாக வாகனங்களை வாங்க அனுமதி கொடுத்துள்ளீர்கள்.

    நாம் சீர்மிகு சிங்காரச் சென்னை என கூறிக் கொள்கிறோம். அதனால் முக்கிய சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதை பிடிப்பதை குறை சொல்ல முடியாது அதை செய்ய வேண்டியது தான். ஆனால் நாங்கள் விரிவாக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்துள்ளோம்.

    திருவொற்றியூர் பகுதியில் மாட்டு மந்தை என்ற ஒரு பகுதியே இருக்கிறது. அவர்கள் மாடுகளை வளர்க்கிறார்கள். உட்புற தெருவில் வளர்க்கிறார்கள். நீங்கள் இப்போது அங்கேயும் மாட்டை பிடித்தால் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இளைய தலைமுறையினர் பால் கறப்பதையே விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.

    ஆனால் இப்போது இருக்கும் மூத்தவர்கள் பால் கறந்து விற்பனை செய்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக உள்ளது. சென்னை மக்களுக்கும் நல்ல பால் கிடைக்கிறது. இதை நாம் தடுக்கும் வகையில் ஏதும் செய்யக்கூடாது. அவர்களுக்கு தொழில் செய்ய ஏதுவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு மாற்று இடம் ஏதாவது வழங்க முடியுமா என பார்க்க வேண்டும்.

    சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளுக்கும் புளியந்தோப்பில் ஒரே ஒரு இறைச்சி வெட்டும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது இது போதுமானது அல்ல. நாம் சுகாதாரத்தை பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கூடம் அமைத்து தர வேண்டும் அப்போது தான் சுத்தமான சுகாதாரமான இறைச்சிகள் பொது மக்களுக்கு கிடைக்கும். இதை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×