என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
- 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- பாதுகாப்பு பணிகள் குறித்தும் தீவைத்த மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கடந்த 15-ந் தேதி சரளைமேடு, புதுப்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை, அங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 21-ந் தேதி மீண்டும் ஜேடர்பாளையம் சரளைமேடு பகுதியில் வக்கீல் துரைசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகள், அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகியவற்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.இதேபோல் ஜேடர்பாளையம் -நல்லூர் செல்லும் சாலையில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான கூரை வீட்டிற்கும், வடகரையாத்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி பூங்கொடி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டும் வீசப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்தும் தீவைத்த மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில் அந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, சுரேஷ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






