search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டி அருகே தந்தையை கொலை செய்த மகன் உள்பட 2 பேர் கைது
    X

    ஆண்டிபட்டி அருகே தந்தையை கொலை செய்த மகன் உள்பட 2 பேர் கைது

    • தேவி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
    • மனைவியை விட்டு பிரிந்த இளங்கோவன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கிடைத்த வருவாயை தனது முதல் மகனுக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்முராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் விக்ரம் (22) என்பவர் தந்தையுடன் வசித்து வருகிறார்.

    தேவி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு விவசாய கூலி வேலை பார்த்து வந்த இளங்கோவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

    அடிக்கடி குமணன்தொழு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று இரவு தனது சகோதரியை பார்த்து விட்டு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது காமன் கல்லூர் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு அருகில் உள்ள சாலையோரம் இளங்கோவனை மர்ம நபர்கள் வீசிச் சென்றனர்.

    அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இளங்கோவன் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    போலீசார் விசாரணையில் இளங்கோவனை அவரது மகன் விக்ரம் மற்றும் அக்கா மகன் தமிழ்செல்வன் (22) ஆகியோர் கொலை செய்தது உறுதியானது. இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மனைவியை விட்டு பிரிந்த இளங்கோவன் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கிடைத்த வருவாயை தனது முதல் மகனுக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளார். 2-வது மகன் விக்ரம் திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்த நிலையில் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இது குறித்து அவர் கேட்டபோது, எனக்கு பிறக்கவில்லை. யாருக்கு பிறந்தாய்? என்று உன் அம்மாவிடம் கேட்டுப்பார் என தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.

    இதனால் மனவேதனையடைந்த அவர் தனது தந்தையை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். அதன்படி தனது அத்தை மகனான தமிழ்செல்வனுடன் சேர்ந்து நேற்று இரவு இளங்கோவனுக்கு அதிக அளவில் மதுபானங்களை வாங்கிக் கொடுத்தனர். போதையில் தனது வீட்டுக்கு இளங்கோவன் நடந்து சென்று கொண்டு இருந்தபோது, பின்னால் வந்த அவர்கள் துண்டால் முகத்தை மூடி கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் சாலையில் வீசி விட்டால் ஏதேனும் வாகனம் மோதி விபத்தில் இறந்ததைப் போல காட்டி விடலாம் என்பதற்காக சாலையோரம் வீசி சென்றுள்ளனர்.

    விசாரணை நடத்தியதில் அவர்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×