என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் கடைகளில் விற்கப்படும்மோரில் சுகாதாரமற்ற தண்ணீர் கலப்பு
- பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது.
- இந்த பகுதியில் தயிர், மோர் விற்பனைகளை கட்டி உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. வெயிலில் வேலை செய்பவர்கள், வேலைக்கு வெளியே செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானம் மற்றும் பழரச கடைகளுக்கு படை எடுக்கின்றனர். மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் தயிர், மோர் உள்ளிட்டவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.
இதனால் இந்த பகுதியில் தயிர், மோர் விற்பனை களை கட்டி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் அதிகளவில் மோர் உள்ளிட்டவற்றை வாங்கி பருகி வருகின்றனர்.
பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து, குடிநீருக்காக பேரூராட்சி நிர்வாகம் சப்ளை செய்கின்றனர். ஆனால் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள மோர் கடைகளில், ஆற்றில் வரும் நீரை சுத்திகரிக்காமல், அப்படியே மோரில் கலந்து விற்பனை செய்கின்றனர்.
முறையான உணவு பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் பின்பற்றுவதில்லை. எனவே இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






