search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளின் சாவுக்கு நீதி கேட்டு கலெக்டரிடம் தந்தை புகார்
    X

    மகளின் சாவுக்கு நீதி கேட்டு கலெக்டரிடம் தந்தை புகார்

    • பெரியோர்களின் முன்னிலையில் பேசி சமாதானம் செய்து எனது மகளை கூட்டி சென்றார்கள்.
    • கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி எனது மகள் தூக்கிட்டு இறந்ததார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை அருகே உள்ள பள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சேட்டு நேற்று உறவினர்களுடன் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    பள்ளக்கொல்லை கிராமத்தில் வசித்து வரும் எனக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். எனது மகள் கவிதாவிற்கும் லாலாகொட்டாயை சேர்ந்த ஒரு நபருக்கும் இருவீட்டு பெரியோர்களின் சம்மதத்தின் பேரில் கடந்த 2020 ஆம் ஆண்டு செம்மனஅள்ளி அருகே உள்ள ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் ஆன சில நாட்களில் வரதட்சனை கேட்டு எனது மகளை சித்ரவதை செய்து வந்தனர். மேற்படி நபர்களின் கொடுமைகள் குறித்து எனது மகள் ஆரம்பத்திலேயே எங்களிடம் கூறினாள். நாங்களும் சமாதானப்படுத்தி வந்தோம்.

    கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மேற்படி நபர்கள் எனது மகளை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்ப டுத்தியதன் காரணமாக எனது மகள் தற்கொலை முயற்சி செய்து, அதன் காரணமாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அதன் பிறகு பெரியோர்களின் முன்னிலையில் பேசி சமாதானம் செய்து எனது மகளை கூட்டி சென்றார்கள். அதன் பிறகும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் பணமும் நகையும் கேட்டு அடித்து கொடுமைப்ப டுத்தினார்கள்.

    மீண்டும் எனது மகள் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மதிக்கோண்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் நிலைய அதிகாரிகள் மேற்படி நபர்களை அழைத்து விசாரித்து இனி இது போன்ற பிரச்சனைகள் வரக்கூடாது, வந்தால் வழக்கு போடுவோம் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி எனது மகள் தூக்கிட்டு இறந்ததாகவும் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்தது.

    காவல் நிலைய அதிகாரிகள் சந்தேக மரணம் என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். ஆனால் எனது மகளின் இறப்பிற்கு முழு முதற் காரணமே எனது மகளின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தான்.

    மேற்படி நபர்கள் திட்டமிட்டு எனது மகளை கொலை செய்துள்ளார்கள். எனவே உரிய விசாரணை செய்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்த குற்றத்திற்கு முறையாக விசாரணை செய்து வழக்கு பதிவு செய்யும்படி காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×