search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் அண்ணன்,தங்கையை வெட்டியது பள்ளி மாணவர்கள்- போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
    X

    நாங்குநேரியில் அண்ணன்,தங்கையை வெட்டியது பள்ளி மாணவர்கள்- போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

    • படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை அவர்களது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அண்ணன்-தங்கையை அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சின்னத்துரை உறவினர்கள் நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    களக்காடு:

    நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது 17) என்ற மகனும், சந்திராசெல்வி (14) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரில் உள்ள பள்ளிக் கூடத்தில் படித்து வருகின்றனர்.

    நேற்று மாலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தனர். பின்னர் இரவில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றபோது, அங்கு புகுந்த மர்மநபர்கள் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகிய 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    படுகாயமடைந்த சின்னத்துரை, சந்திரா செல்வி ஆகியோரை அவர்களது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதனைப்பார்த்த அவர்களுடைய சின்ன தாத்தா கிருஷ்ணன் (59) அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து நாங்குநேரி போலீ சார் வழக்குப்பதிவு செய்து, வீடுபுகுந்து அண்ணன்-தங்கையை அரிவாளால் வெட்டிய கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே அந்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி சின்னத்துரை உறவினர்கள் நள்ளிரவு வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், சின்னத்துரையை அவர் படிக்கும் அதே பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்கள் சிலர் சிகரெட் வாங்கி வருமாறு அடிக்கடி கூறி வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சின்னத்துரை தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் நேற்று பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் கூறியுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிளஸ்-2 மாணவர்கள் சின்னத்துரை மற்றும் அவர் சகோதரியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×