என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்கள்.
ரூ.96 கோடி மதிப்பில் கடன்கள் வழங்க ஏற்பாடு-கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்.
- முகாமில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி மதிப்பில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தனியாரிடம் கடன் பெற்று மீளமுடியாமல் இருக்கும் அப்பாவி மக்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனுதவிகள் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், இந்தியன் வங்கி சார்பாக 75-ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா, கிருஷ்ணகிரி மாவட்ட வங்கிகள் இணைந்து நடத்தும் கடன் வழங்கும் முகாம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர் பழனிகுமார், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் சீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் சார்பாக 75ம் ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா நாடு முழுவதும் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகள் பங்குபெற்ற, வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் மற்றும் கடன் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இந்த முகாமில் 1,326 பயனாளிகளுக்கு ரூ.96 கோடி மதிப்பில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் ஏழை, எளிய மக்கள் உயர்வதற்கு வங்கிகளுக்கு பொறுப்புகள் அதிகம். மாவட்டத்தின் கடைக்கோடி மலைக்கிராமங்களுக்கு வங்கி மேலாளர்கள் ஒரு குழுவாக சென்று, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் சுய தொழில் பற்றியும், 2 ரூபாய், 3 ரூபாய் மற்றும் மீட்டர் வட்டியென தனியாரிடம் கடன் பெற்று கடனிலிருந்து மீளமுடியாமல் இருக்கும் அப்பாவி மக்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடனுதவிகள் வழங்க வேண்டும். மேலும், வங்கிகள் கல்வி கடன்களை தகுதியுடையவர்களக்கு தாமதமின்றி வழங்கி, அவர்கள் கல்வி கற்றிட உதவிட வேண்டும்.
இவ்வாறுஅவர் பேசினார்.






