என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீரை கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க் திறந்து வைத்தார்.
பாம்பாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
- பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
- 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா பாம்பாறு அணையில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
தண்ணீரை கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான வந்தனா கார்க் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
பாம்பாறு அணை 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பாறு அணையின் முழு நீர் மட்ட உயரம் 19.68 அடி. இதன் முழு கொள்ளளவு 280 மி.க.அடி ஆகும். பாம்பாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2022-2023-ம் ஆண்டு ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்த ராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள்வலசை, புளியம்பட்டி, எட்டிப்பட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் ஆகிய 12 கிராமங்களைச் சேர்ந்த 2,501 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அதே போல தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் உள்ள தா.அம்மாப்பேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி மற்றும் ஆண்டியூர் ஆகிய கிராமங்களிலுள்ள 1,499 ஏக்கர் என மொத்தம் 16 கிராமங்களிலுள்ள 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றது.
எனவே, விவசாயிகள் பொதுப் பணித்துறையினருடன் ஒத்துழைத்து நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






