search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில்   16 லட்சத்து 6 ஆயிரத்து 156 வாக்காளர்கள்
    X

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 16 லட்சத்து 6 ஆயிரத்து 156 வாக்காளர்கள்

    • செப்டம்பர் மாதம் 1ம் தேதிகளில் 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களும் இணைத்துக் கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்குமுறைத் திருத்தம் -2023 பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்(பொறுப்பு) ராஜேஸ்வரி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அதை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி உட்பட 6 தொகுதிகளில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 837 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 99 ஆயிரத்து 28 பெண் வாக்காளர்களும், 291 இதரர் உட்பட 16 லட்சத்து 6 ஆயிரத்து 156 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பின்னர், தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், இறந்த, வெளியூர் சென்ற நபர்கள் நீக்கம் செய்ததின் அடிப்படையில் புதியதாக 12 ஆயிரத்து 19 வாக்காளர்கள் நாளது வரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தற்போது நடைபெற உள்ள சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்படி வருகிற ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து இளம் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்திட தகுதியுடைய வராகின்றனர்.

    இதற்காக, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் வளாக தூதர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, இளம் வாக்காளர்கள் அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதே போல், தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகளின்படி, வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதிகளில் 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்கள்து விண்ணப்பங்கள் தற்காலிக மாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, உரிய தகுதியேற்படுத்தும் நாட்களில், பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    இதே போல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களும் இணைத்துக் கொள்ளலாம். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் -2023-ன்படி வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நேற்று (9ம் தேதி) முதல் டிசம்பர் 8-ம் தேதி வரையிலும், வருகிற 12, 13, 26 மற்றும் 27ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று அன்றே பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், வட்டாட்சியர்கள் (தேர்தல்) ஜெய்சங்கர், சம்பத், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சரவணன், கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் கோவிந்தசாமி, தங்கராஜ், அதிமுக நகர செயலாளர் கேசவன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லலித்ஆண்டனி, பா.ஜ மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசன், மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×