என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரளிவிதையை குடித்த தாய் பலி
- மகள் கவலைக்கிடம்
- உடல் நிலை பாதிக்கப்பட்டதால் விபரீதம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 48) லாரி டிரைவர். இவரது மனைவி ஜோதி லட்சுமி (45) இவர்களுக்கு பவித்ரா (27) வைஷ்ணவி (25) பவானிசங்கர் (23) என இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
இந்த நிலையில் பவித்ரா என்பவருக்கு அடுத்த மாதம் டிசம்பர் மாதத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மகாலிங்கம், பவானி சங்கர் ஆகியோர் திருமண பத்திரிகையை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்க சென்றுள்ளனர்.
நேற்று இரவு பவித்ரா அருகில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஜோதி லட்சுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜோதிலட்சுமி நேற்று இரவு அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த அவரது மகள் வைஷ்ணவியும் அரளிவிதையை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பவித்ரா தனது தாய் மற்றும் சகோதரி 2 பேரும் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள் வீட்டிற்கு சென்று மயங்கிய நிலையில் இருந்த ஜோதிலட்சுமி மற்றும் வைஷ்ணவியை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஜோதிலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வைஷ்ணவி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






