search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரி, கல்லூரி விரைவில் திறப்பு
    X

    அரசு ஆஸ்பத்திரி, கல்லூரி விரைவில் திறப்பு

    • ரூ.3 கோடியே 76 லட்சத்து 49 ஆயிரத்து 673 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்
    • அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி பங்கேற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வசூர், பள்ளேரி மற்றும் கொண்டகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி வசூர் கிராமத்தில் நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து பேசினார்.

    முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு 247 பயனாளிகள் மற்றும் 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 கோடியே 76 லட்சத்து 49 ஆயிரத்து 673 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பதற்காக இது போன்ற சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்படுகிறது.

    என்னுடைய தொகுதியை பொறுத்த வரையில் என்னால் இயன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.

    காட்பாடி தொகுதியில் பொன்னைஆற்றில் தற்போது ரூ.40 கோடி மதிப்பில், உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று ரூ.18 கோடி மதிப்பில் செக் டேம் கட்டி வருகின்றோம்.

    இதனால் மழைக்கா லங்களில் வரும் தண்ணீர் அங்கேயே தேங்கி நிற்கும். அதனால் குடிநீர் பயன்பாட்டிற்கு தட்டுப்பாடு வராது. மேலும் மேல்பாடிக்கு செல்லும் பாலமும் கட்டப்பட்டு வருகிறது.

    ஆஸ்பத்திரி

    கடந்த தேர்தலின் போது எனக்கு வாக்களித்தால் ஒரு மருத்துவமனையினை கொண்டு வருவேன் என்று சொல்லியிருந்தேன். அதனை எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் வகையில் சேர்க்காடு கூட்டுரோடில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று இங்குள்ள பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால் வேலூர், வாலாஜா, ஆற்காட்டிற்கோ செல்ல வேண்டும். அந்த நிலை மாறவேண்டும் என்பதற்காக சேர்க்காடு கூட்டுரோட்டில் ஒரு கலைக் கல்லூரியும் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டின் இறுதிக்குள் மேற்குறிப்பிட்ட அனைத்துப் திட்டப் பணிகளும் திறக்கப்படும்.

    அதேபோன்று காவிரி கூட்டு குடிநிர் திட்டத்தினையும் இப்பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதேபோன்று காட்பாடி தொகுதியில் சிப்காட் ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளோம்.

    அதில் காட்பாடி தொகுதி சுற்றுவட்டாரத்திலுள்ள மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். விரைவில் முதல்-அமைச்சரால் சிப்காட் தொடங்கப்படும். இதுபோன்று மக்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

    விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை கொண்டு வந்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வருகின்றார்கள்.

    குறிப்பாக மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், இல்லம் தேடிக் கல்வி. காலை உணவு, புதுமைப்பெண் இது போன்ற மகத்தான திட்டங்களை செயல்படுத்தியுள்ள காரணத்தினால் பெரும்பாலான பொதுமக்கள், மகளிர்கள், மாணவ மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    மக்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கிட ஏதுவாக முதல்வரின் முகவரி என்ற திட்டத்தினை துவக்கி அதில் பெறப்படும் மனுக்களுக்கு தகுதியின் அடிப்படையில் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர் வெங்க ட்ரமணன், துணை தலைவர் ராதா கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம். காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் வேல்முருகன், வாலாஜா தாசில்தார் நடராஜன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சாந்தி, புஷ்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×