என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
- 450 கிலோ சிக்கியது
- குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய லட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வந்து செல்லும் ரெயில்கள், நடைமேடை பகுதிகளில் நேற்று காலை சோதனை நடத்தினர்.
அப்போது 5-வது நடைமேடையில் அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பா வரை செல்லும் ரெயில் பெட்டிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நடைமேடை அருகே பைகளில் சுமார் 450 கிலோ ரேசன் அரிசி இருப்பதை கண்டு அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியை சேர்ந்த ராணி (வயது 60), பாஞ்சாலம்மாள் (58), நாராயணன் (62) மற்றும் செந்தாமரை (66) ஆகியோர் ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






