பயனாளிகளால் புறக்கணிக்கப்பட்ட சுனாமி வீடுகள்

அடிப்படை வசதி செய்து கொடுக்காததால் பயனாளிகளால் புறக்கணிக்கப்பட்ட சுனாமி வீடுகள் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீமை கருவேல மர காடுகளுக்குள் வீடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பயனாளிகளால் புறக்கணிக்கப்பட்ட சுனாமி வீடுகள்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட மக்களை சுனாமி பேரலை பாதிப்பிலிருந்து பாதுகாக்க திட்டம் வகுத்து கோடிகளை கொட்டி 144 கான்கிரீட் வீடுகளை கட்டி மணல் குடியில் ரம்மியமான கிராமம் அமைக்கப்பட்டது. அங்கு அடிப்படை வசதிகளோ வாழ்வாதார முன்னேற்பாடுகளோ செய்து கொடுக்கப் படாததால் குடியிருப்பு காலியாகி கருவேலமரம் மண்டிக்கிடக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி சுனாமி தாக்கியதில் தமிழகத்தில் மட்டும் 2,758 பேர், புதுவையில் 377 பேர். தென்னிந்தியாவின் மொத்த பொருளாதார இழப்பில் 50 விழுக்காட்டை(சுமார் ரூ.4,700 கோடி) அளவுக்கு, தமிழகம் சந்தித்தது. இதனால் திரும்பும் திசையெங்கும் மரண ஓலம் பசி பட்டினியில் வாடிய மக்களை மீள் கட்டமைப்பு செய்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதிலும் குறிப்பாக வீடுகளை இழந்து தவிக்கும் பாதுகாப்பாற்ற மீனவ மக்களுக்கு இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை கவலையின்றி பாதுகாத்துக்கொள்ள ஏதுவாக பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை மத்திய அரசின் நிதி உதவியோடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டப்பட்டது.

அதனை பேரலை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்து கடந்த 2009-10-ம் நிதியாண்டில் வழங்கப்பட்டது.

இந்தமாதிரியான மீனவ குடியிருப்புகள் பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதியில் கட்டப் பட்டுள்ளதை போல் ராமநாதபுரம் மாவட்டம் மணக் குடியில் அமைந்துள்ளது.

மணக்குடி ஆற்றுநீர் கடலில் கலக்கும் ரம்மியமான முகத்துவாரம் பகுதி இயற்கையின் பசுமை மாறாது மண்மணக்கும் இடமாக இருக்கும் இந்த மணக்குடியில் க ழிவறை, படுக்கை அறை, வரவேற்பறை என அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட 144 கான்கிரீட் சுனாமி வீடுகள் ரூ.425.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு ஆழிப் பேரலையில் பாதிக்கப்பட்டு பகுதியில் வாழ்ந்துவந்த மீனவ மக்களுக்கு வழங்கப்பட்டது.

மீனவ கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வாழ்வாதாரமே மீன்பிடி தொழில்தான். தற்போது மீனவ கிராமங்களிலிருந்து மீள்குடியேற்றம் என்ற பெயரில் வேளாண் பகுதியில் அவர்களை குடியேற்றியதால் வாழ்வாதாரத்திற்கு அவர்களால் என்ன செய்ய இயலும்?.

இந்த கிராம மக்கள் போக்குவரத்து, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் வாழ தகுதியற்று தனித்து விடப்பட்டதை போல இருந்ததால் பேரெழுதி பூஜை போட்டு மகிழ்வோடு குடியேறினர். மக்கள் ஒரு சில மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் ஒருவர் பின் ஒருவராக வீட்டை காலி செய்ய தொடங்கி ஒட்டுமொத்த கிராமமே காலியானது.

வசிக்க மக்கள் இல்லாததால் மெல்ல மெல்ல சமூக விரோதிகளின் கூடாரமாகி சீமை கருவேலமரம் வளரவே வீட்டை சுற்றி காடு என்ற நிலை மாறி இப்போது சீமை கருவேலமர காடுகளுக்குள் வீடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மது, மாது என ஊருக்கு ஒதுக்குபுறமாக எந்த தொந்தரவும் இல்லாத ரிசார்ட்டாக மாறியுள்ள மணக்குடி சுனாமி வீடுகள் இப்போது சமூக விரோதி களின் கூடாரமாக மாறி வருகிறது.

இது தொடர்பாக கருப்பன் குடும்பன் பச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் சதீஷ்குமார் கூறுகையில், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தகுதி வாய்ந்த சரியான பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய நபர்களுக்கு வீடு ஒதுக்கியதால் இங்கு குடியேற மக்கள் முன்வர வில்லை. மணக்குடி சுனாமி குடியிருப்பில் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப் படாததால் புலம்பெயர்ந்து சென்று விட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என பாதிக்கப்பட்ட பயனாளிகள் கூறுகின்றனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com