என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
- மழை காரணமாக இன்று ராமநாதபுரம், சிவகங்கையில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- பாம்பன் துறைமுகத்தில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள மான்டஸ் புயல் இன்று இரவு சென்னையில் கரை கடக்கிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்க ளில் ேலசான சாரல் மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இன்று காலையும் கருமேகங்கள் சூழ்ந்தன.
ஆனால் மழை இல்லை. இருப்பினும் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.
ராமேசுவரம், ஏர்வாடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. புயல் காரணமாக இன்றும் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 4-வது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன் துறைமுகத்தில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, காளை யார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மதுரையில் நேற்று மாலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையில் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. உசிலம்பட்டி, மேலூர், திருப்பரங்குன்றம், சோழவந்தான், சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.






