என் மலர்
உள்ளூர் செய்திகள்

புரட்டாசி 3-வது சனிக்கிழமை: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
- 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
- அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த மாதம் 18&ந் தேதி தொடங்கியது. நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி கனவாய்ப்பட்டி வெங்கட்ரமணசாமி கோவில், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள பெருமாள் சன்னதி, பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோவில், பொன்மலை சீனிவாச பெருமாள், பாளேகுளி அனுமந்தராய சாமி, கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள், தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள், கிருஷ்ணா கோவில் தெரு நவநீத வேணு கோபால சாமி, பாப்பாரப்பட்டி வேணுகோபால் சாமி கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். அதே போல கனவாய்ப்பட்டி பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மொட்டை போட்டுக் கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
நேற்று 3-வது புரட்டாசி சனி என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிகமான பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் வீடுகளிலும் காலையிலேயே பொதுமக்கள் குளித்து, பெருமாளை வழிபட்டனர். இதே போல கடைவீதிகளிலும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகமாக இருந்தது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.






