என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகை மோசடி செய்த கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சஸ்பெண்டு
- கூட்டுறவு நகையை தனியார் வங்கியில் அடகு வைத்த வங்கி செயலாளர், நகை மதிப்பீட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- கூட்டுறவு சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் 4 பவுன் நகைகளை அடகு வைத்தார். அதை மீட்க முயன்ற போது நகை காணாமல் போனது தெரிய வந்தது.
வங்கி ஊழியர்கள் மாற்று நகையை வழங்க அவரை சமாளித்தனர். இது தொடர்பாக கிருஷ்ணன் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை பார்த்த நல்லூர், நெருஞ்சிக்குடி, வாழைக்குறிச்சி, கூடலூர் ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் 800-க்கும மேற்பட்டவர்கள் வங்கியில் திரண்டனர். அவர்கள் அடகு வைத்த நகைகளின் நிலை குறித்து கேட்டனர்.
இது தொடர்பாக கூட்டுறவு துறை அதிகாரிகள் வங்கியில் ஆய்வு மேற்கொண்ட போது 159.8 கிராம் தங்க நகைகள் காணாமல் போனதும் அதை நகை மதிப்பீட்டாளான சாமிநாதன் தனது சொந்த காரணத்துக்காக தனியார் வங்கியல் அடகு வைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அறந்தாங்கி கூட்டுறவு சார்பதிவாளர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் நகை மதிப்பீட்டாளர் சாமிநாதன் உடந்தையாக இருந்த வங்கி செயலாளர் சங்கிலி ஆகியோர் மீது காரையூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு சங்கங்களின் புதுகை மண்டல இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.






