என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில்  விவசாயிகளின் நேரடி நெல் விதைப்பு பணிகள்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் நேரடி நெல் விதைப்பு பணிகள்

    • அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி மற்றும் அரிமளம் ஆகிய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரடி நெல் விதைப்பு பணிகளை, வேளாண்மை இணை இயக்குநர் சக்திவேல் தலைமையில் குழுவினர் பார்வையிட்டனர்.
    • 2022-23 ஆம் வருட, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல் விளக்கங்கள், ஹெக்டேருக்கு ரூ.7,500 மானியம் வழங்கப்படுகிறது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி மற்றும் அரிமளம் ஆகிய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரடி நெல் விதைப்பு பணிகளை, வேளாண்மை இணை இயக்குநர் சக்திவேல் தலைமையில் குழுவினர் பார்வையிட்டனர்.

    பின்னர் சக்திவேல் தெரிவித்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகள் அறந்தாங்கி வட்டாரத்தில் 6,150 ஹெக்டேலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 12350 ஹெக்டேலும், மணமேல்குடி வட்டாரத்தில் 8200 ஹெக்டேலும், அரிமளம் வட்டாரத்தில் 3750 ஹெக்டேலும் மேற்கொள்ளப்படுகிறது.

    2022-23 ஆம் வருட, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல் விளக்கங்கள், ஹெக்டேருக்கு ரூ.7,500 மானியத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில், 30 ெஹக்டேரில் அமைக்க, ரூ.2.25 லட்சம், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 30 ஹெக்டேரில் அமைக்க ரூ.2.25 லட்சம், மணமேல்குடி வட்டாரத்தில், 30 ஹெக்டேரில் அமைக்க ரூ.2.25 லட்சம் மற்றும் அரிமளம் வட்டாரத்தில், 10 ஹெக்டேரில் அமைக்க ரூ.75 ஆயிரமும், மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெரும்பாலான செயல் விளக்கங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் அமலாக்கம் செய்யப்படும் கிராமங்களில், செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றுஅவர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, அறந்தாங்கி வட்டாரத்தில், ஆயிங்குடி, களக்காடு மற்றும் தாந்தாணி பகுதிகளிலும், ஆவுடையர்கோவில் வட்டாரத்தில், பாண்டிபத்திரம் பகுதியிலும், மணமேல்குடி வட்டாரத்தில் விச்சூர், கானாடு மற்றும் கம்பர்கோவில் பகுதிகளிலும், அரிமளம் வட்டாரத்தில் இரும்பாநாடு மற்றும் குருங்கூர் பகுதிகளிலும், நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல்விளக்கங்களை பார்வையிட்டார்.

    அப்போது செயல் விளக்கங்கள், அமைக்கத் தேவையான நேரடி நெல் விதைப்புக்குரிய நெல் விதைகள், வரப்புப் பயிராக விதைப்பு செய்யக்கூடிய உளுந்து விதைகள், நெல் விதைகளுக்கு, விதை நேர்த்தி செய்து விதைக்கப் பயன்படும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் நெல் விதைப்பு செய்தவுடன் மேலாக இடக்கூடிய நெல் நுண்சத்து முதலிய இடுபொருட்கள் அந்தந்த வட்டாரங்களில், தொகுப்பு செயல் விளக்கங்களை செயலாக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் சக்திவேல் வழங்கினார்.

    இந்நிகழ்வில், துணை வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) ரவிச்சந்திரன், ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் சர்புதீன், தொழில் நுட்ப அலுவலர்கள் கார்த்திக் மற்றும் சரண்யா, வட்டார வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×