என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிளிக்கு வந்த தடையால் எலி ஜோதிடத்திற்கு மாறிய ஜோதிடர்
புதுக்கோட்டை,
வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பட்டியலிடப்பட்டுள்ள உயிரினங்களை வீட்டில் வளர்க்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த பட்டியலில் பச்சைக்கிளியும் உள்ளது.
அதன் அடிப்படையில், தற்போது வீட்டில் பச்சைக்கிளியை வளர்த்து வந்த நபர்கள் மற்றும் பச்சை கிளியை வைத்து சோசியம் பார்க்கும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்களிடம் உள்ள பச்சைக்கிளிகளை வனத்துறையினர் ஒப்படைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏராளமான நபர்கள் தாங்கள் வீட்டில் வளர்த்து வரும் பச்சைக்கிளியை வனத்துறையினரிடம் ஒப்படைத்து வரும் சூழலில், பச்சைக்கிளியை நம்பி கிளி ஜோசியம் பார்த்து வந்த பலர் தங்களது வயிற்றுப் பிழைப்புக்கு வழி தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், 30 வருட காலமாக பச்சைக்கிளியை வைத்து சோசியம் பார்த்து வந்த ஒரு நபர் "நீங்க, எங்க கிளியை தானே எங்கிட்ட இருந்து பறிப்பீங்க…, நாங்க எலியை வைத்து சோசியம் பார்ப்போம்…" என புதுவிதமான முயற்சியில் இறங்கி தற்போது வெள்ளெலியை வைத்து ஜோசியம் பார்த்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் ராயபுரத்தில் இருந்து கடியாபட்டி ெ சல்லும் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு தீனதயாளன் (வயது35) என்பவர் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவர் வைத்திருந்த கூண்டில் கிளிக்கு பதில் வெள்ளெலி வைத்து ஜோதிடம் பார்த்து வந்தார்.
இது குறித்து நம் நிருபரிடம் தீனதயாளன் கூறியதாவது:-
கிளி வளர்க்க அரசு தடை விதித்துள்ளது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு என்னிடமிருந்த 2 கிளிகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்துவிட்டனர். வேறு தொழில் தெரியாததால் வெள்ளெலியை வைத்து ஜோதிடம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
இதற்காக கொடைக்கானல் சென்று அங்கிருந்த ஒருவரிடம் வெள்ளெலியை வாங்கி வந்து சீட்டு எடுத்து கொடுக்க பயிற்சி அளித்தேன். அது நன்றாக பயிற்சி பெற்றதும் தொழிலை தொடங்கினேன். ஜோதிடம் பார்ப்பதைவிட எலி சீட்டு எடுப்பதை வேடிக்கை பார்க்கவே ஏராளமானோர் வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






