என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் விஷ பாட்டிலுடன் 3-வது நாளாக போராட்டம் நடத்தும் மக்கள்
- லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
- புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரே வெறிச்சோடியது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தூசியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அந்த கிராம மக்கள் கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி பல இடங்களில் மனு அளித்தனர். மேலும் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர்.
மேலும் கடந்த 2-ந்தேதி கொரட்டகிரி கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற சென்றனர். அவர்களிடம் மாவட்ட போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
ஆனால் அதிகாரிகள் கூறியபடி கல் குவாரிகளை மூட உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்று முன்தினம் கிராம மக்கள் கால்நடைகள் மற்றும் மூட்டை முடிச்சுகளுடன் ஊரை காலி செய்து ஊரின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரே வெறிச்சோடியது.
இதனிடையே நேற்று ஊருக்குள் செல்லும் சாலையை முட்செடிகளை வைத்து மக்கள் அடைத்தனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கல்குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதாகவும், ஒரு கமிட்டி அமைத்து அதன் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு நீங்கள் ஆய்வு செய்து வரும் வரை நாங்கள் கூடாரத்திலேயே காத்திருக்கிறோம்.
இதில் சமூக உடன்பாடு ஏற்படவில்லை எனில் குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம் என கிராம மக்கள் கூறி கொட்டும் மழையில் சமைத்து சாப்பிட்டு அங்கேயே குழந்தைகளுடன் தங்கினர். இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என சமுக ஆர்வலர்களும் பொதுமக்க ளும் கூறிவருகின்றனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.






