என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடக்கம்
- இரண்டாம் கட்ட முகாம் வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையும் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
- விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி காமராஜர் நகர் ஊரக வாழ்வாதார அலகு அலுவலகம், துறிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி நேதாஜி சாலையில் உள்ள கே.எஸ்.ஆர் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சரயு நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் முகாமை தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 20-ந் தேதி முதல் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம், டோக்கன் ஆகியவை நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மூலம் வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் வருகிற ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரையும் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அடடை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட்ட அனைத்து முகாம் நடைபெறும் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.






