என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சாமந்தி பூக்களை படத்தில் காணலாம்.
சாமந்தி பூக்களின் விலை தொடர் சரிவு : விவசாயிகள் வேதனை
- தரும்புரி மாவட்டத்தில் சாமந்தி பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- செண்டுமல்லி ரூ.10, சாமந்தி ரூ.20 என விற்பனையானது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, மாரண்ட அள்ளி, காரிமங்கலம், தொப்பூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
இப்பகுதிகளில் பரவலாக விவசாயிகள் குண்டுமல்லி, கனகாம்பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழிகொண்டை, அரளி உள்ளிட்ட பூ வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூக்கள் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி பூக்கள் மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்தது. இதனால் பூக்களை வாங்க ஆளில்லாமல், கேட்பாரற்று விலை குறைந்து விற்பனையானது.
தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில், இன்று சனிக்கிழமை பொதுமக்கள் விரதம் இருப்பதால், பூக்களின் தேவை அதிகரிக்கும், பூக்களின் விலை உயரும் என விவசா யிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் புரட்டாசி முதல் சனி கிழமை நாளான இன்றும் பூக்களின் விலை உயராமல், குறைந்த விலையியேயே விற்ப னையானது.
இன்றைய பூக்கள் சந்தையில் குண்டு மல்லி கிலோ ரூ.400, கனகாம்பரம் கிலோ ரூ.400, சன்ன மல்லி கிலோ ரூ.280, அரளி கிலோ ரூ.60, பட்டன் ரோஸ் கிலோ ரூ.60, தாமரை ஒரு மொட்டு ரூ.20, சம்பங்கி ரூ.60, செண்டுமல்லி ரூ.10, சாமந்தி ரூ.20 , பன்னீர் ரோஸ் ரூ.40, வெள்ளை சாமந்தி ரூ.40 என விற்பனையானது.
கடந்த சில தினங்களாக பூக்களின் விலை குறைந்து விற்பனையான நிலையில் இன்றும் அதே நிலை நீடித்ததால், விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அடுத்த வாரம் 2- வது சனிக்கிழமை என்பதால், பூக்களின் விலை சற்று உயர வாய்ப்புள்ளதாக வியா பாரியாகள் தெரிவித்தனர்.






