search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை கண்டுபிடிக்க கோரி கணவர் புகார் வழக்கு பதிவு செய்ய லஞ்சம் கேட்கும் போலீசார்
    X

    கோப்பு படம்

    மனைவியை கண்டுபிடிக்க கோரி கணவர் புகார் வழக்கு பதிவு செய்ய லஞ்சம் கேட்கும் போலீசார்

    • மனைவியை காணாமல் போனதால் அவரது கணவர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டுமானால் ரூ.5 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டுள்ளனர் என புகார்அளித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள செட்டிநாயக்கன்பட்டி ரோடுசத்யா நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 52). இவரது மனைவி விஜயா (46), உடல் நலம் சரி இல்லாததால் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அதற்கு அங்கிருந்த போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டுமானால் ரூ.5 ஆயிரம் பணம் வேண்டும் என கேட்டுள்ளனர்.

    இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் எப்படியாவது மனைவியை கண்டுபிடித்து கொடுங்கள். பணத்தை தருகிறேன். தற்போதைக்கு பாதி தொகையை தருகிறேன் என்றார். ஆனால் அதனை போலீசார் ஏற்கவில்லை.

    2 நாட்கள் கழித்து வழக்கு பதிவு செய்து விட்டோம். உங்கள் மனைவியை கண்டுபிடிக்க பணம் தருகிறீர்களா? என கேட்டுள்ளனர். மேலும் இது அனைத்து வழக்குகளுக்கும் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைதான். எனவே நீங்கள் பணம் கொடுத்தாக வேண்டும் என கேட்டுள்ளனர்.

    பணம் கொடுக்காததால் வழக்குப் பதிவு செய்த பிறகும் அதனை மாவட்ட இணையதள குற்றப்பிரிவு பக்கத்தில் பதிவேற்றம் செய்யாமல் வைத்துள்ளனர். உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி எங்கே உள்ளார்? என கடந்த 5 நாட்களாக அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தீவிரமாக தேடி வரும் நிலையில் அதைப்பற்றி சற்றும் கண்டுகொள்ளாமல் போலீசார் பணத்திலேயே குறியாக இருப்பதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் பல போலீஸ் நிலையங்களில் இது போல வழக்குப்பதிவு செய்வதற்கே பணம் கேட்கப்படுகிறது என்றும், பணம் கொடுக்காதவர்கள் அலைக்கழிக்கப்ப–டுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    வசதி இல்லாதவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களை பல முறை அலைக்கழிப்பு செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீஸ் துறை மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்ட போலீசார் மீதும் அது போன்ற நிலை ஏற்படாமல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×