search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்-பயணிகள் கோரிக்கை
    X

    நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்-பயணிகள் கோரிக்கை

    • அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள் உள்ளது.
    • நடைமேடைகள் நீளத்தை அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும்.

    தென்காசி:

    தென்காசியில் 540 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகள், 507 மீட்டர் நீளம் கொண்ட ஒரு நடைமேடை, கீழப்புலியூர், மேட்டூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பேட்டை, நெல்லை டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் 405 மீட்டர் நீளம் கொண்ட ஒற்றை நடைமேடை, பாவூர்சத்திரம், கீழக்கடையம், சேரன்மகாதேவி ஆகியவற்றில் 405 மீட்டர் நீளம் கொண்ட 2 நடை மேடைகளும், அம்பையில் 475 மீட்டர் நீளம் கொண்ட 3 நடைமேடைகளும் உள்ளது.

    நெல்லையில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பயணிகள் நடைமேடைகள், 2 சரக்கு லைன், ஒரு வி.ஐ.பி. லைன், 5 ஸ்டேபிளிங் லைன், 2 சிக் லைன் உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் நிறுத்துவதற்கு 540 மீட்டர் நீளம் கொண்ட நடைமேடை தேவை. தென்காசி மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களில் மட்டுமே தென்காசி - நெல்லை ரெயில் வழித்தடத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் உள்ளது. மற்ற நிலையங்களில் இல்லை.

    இந்த மொத்த ரெயில் வழித்தடங்களின் நடைமேடைகளின் நீளத்தை நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்க முடியும்.

    இதுகுறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-

    தற்போது நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில், அதிகபட்சமாக நெல்லை - மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 பெட்டிகளுடனும், செங்கோட்டை - தாம்பரம் ரெயில் 17 பெட்டிகளுடனும் இயங்கி வருகின்றன. இந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம், நெல்லை - தென்காசி வழித்தடங்களில் உள்ள முக்கிய ரெயில்வே கிராசிங் நிலையங்களான சேரன்மகாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நடைமேடைகளின் நீளத்தை 540 மீட்டர் வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும். எனவே நடைமேடைகளை கூடுதலாக 135 மீட்டர் நீளம் அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும். ஒரு நடைமேடையை நீட்டிப்பதற்கு தோராயமாக ரூ.15 லட்சம் வரை செலவாகும். எனவே தெற்கு ரெயில்வே உடனடியாக போர்க்கால அடிப்படையில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×