search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிடமனேரி ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும்
    X

    ஏரியில் படர்ந்து காணப்படும் ஆகாயதாமரையை படத்தில் காணலாம்.

    பிடமனேரி ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும்

    • 10 வார்டுகளுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை இந்த ஏரியில் விடுவதால் ஏரி கழிவு நீர் கலந்து சாக்கடை நிறைந்த ஏரியாக மாறி உள்ளது.
    • தினமும் நடைபயிற்சி செய்து வரும் பொதுமக்கள் வயதான முதியவர்கள் அரசு ஊழியர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி தமிழகத்தில் மிகப்பெரிய முதன்மை ஊராட்சியாக இருந்து வருகிறது.

    இந்த ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பிடமனேரி, வி.ஜெட்டிஅள்ளி, மாந்தோப்பு, நெல்லிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக இலக்கியம்பட்டி ஏரி, பிடமனேரி ஏரி ஆகிய இரண்டு ஏரிகள் இருந்து வருகிறது.

    பிடமனேரி ஏரி 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தற்போது ஏரியின் நடுவே 2 திறந்தவெளி கிணறுகள் அமைத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது.

    10 வார்டுகளுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை இந்த ஏரியில் விடுவதால் ஏரி கழிவு நீர் கலந்து சாக்கடை நிறைந்த ஏரியாக மாறி உள்ளது.

    ஆண்டு தோறும் அரசுக்கு மீன் பாசி விற்பனையில் 15 லட்சத்திற்கு மேல் வருவாயை ஈட்டி தரும் இந்த ஏரி தற்பொழுது ஆகாயத்தாமரை நிறைந்து பச்சை பசேல் என காணப்படுகிறது.

    ஏரி மாசுபட்டு உள்ளதால் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசி வருவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஏரிக்கரையின் மீது தினமும் நடைபயிற்சி செய்து வரும் பொதுமக்கள் வயதான முதியவர்கள் அரசு ஊழியர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    ஏரியை சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது இலக்கியம்பட்டி ஊராட்சி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிடமனேரி ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையால் தண்ணீர் மாசுபட்டு மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், பஞ்சாயத்து நிர்வாகமும், ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி ஏரியில் கலக்கும் கழிவுநீரை தடுக்க வேண்டும்.

    மாற்று வழியில் கால்வாய் அமைத்து அதன் வழியாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலக்கியம்பட்டி பொதுமக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வரும் ஏரியை தூய்மைப்படுத்தி அழகு படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×