search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
    X

    பெரம்பலூரில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி

    • உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர் :

    தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு உலக குழந்தை தொழிலாளர் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூரில் கலெக்டர் கற்பகம் தலைமையிலும், அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

    இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: 14 வயதிற்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் எவ்வித பணியிலோ அல்லது தொழிலிலோ ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு மீறி அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து ரூ.50 ஆயிரம் அபராதமோ அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க நேரிடும்.

    பொதுமக்கள், குழந்தை தொழிலாளர் பணிபுரிவதை கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவறும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிட பாடுபட வேண்டும், என்றார். மேலும் பெரம்பலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையிலும், மாவட்ட போலீசார் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    Next Story
    ×