என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பெண் சாவு
- மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார்
- ஈரத்துண்டை கம்பியில் காய போட முயன்றார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை அண்ணா நகர் பழைய காலனியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மனைவி பச்சையம்மாள்(வயது 65). விவசாயி கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் அதன் பின்புறம் உள்ள இடத்தில் தகர கொட்டகை அமைத்து வசித்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம்போல் பச்சையம்மாள் விவசாய வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது அவர் கை, கால்களை கழுவிய பின்னர் துண்டால் துடைத்துவிட்டு, ஈரத்துண்டை தனது கொட்டகைக்கு வெளியே இருந்த கம்பியில் காய போட முயன்றார். அப்போது அவர் மீது திடீரென்று மின்சாரம் பாய்ந்ததால் பச்சையம்மாள் சத்தம் போட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த காசிநாதனின் மனைவி செல்வி(48) ஓடி வந்து பச்சையம்மாளை பிடித்து இழுத்து, காப்பாற்ற முயன்றார். அப்போது செல்வி மீதும் மின்சாரம் பாயந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் பச்சையம்மாளை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மங்களமேடு போலீசார், செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது."






