காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு

காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மரியாதை செலுத்தினர்
காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
Published on

பெரம்பலூர்

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் மற்றும் பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையர்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, பெரம்பலூர் சிறை துணை சூப்பிரண்டு சிவா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜூனன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com