என் மலர்
உள்ளூர் செய்திகள்

சட்டமன்ற பொது கணக்குக் குழுவினர் ஆய்வு
- அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
- பெரம்பலூர் கனிம வளத்துறையில் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு
பெரம்பலூர்,
பெரம்பலூர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், டாக்டர் சரஸ்வதி, சிந்தனை செல்வன், மாரிமுத்து, கார்த்திகேயன், பிரகாஷ், பூண்டி கலைவாணன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் முன்னிலையில் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அக்குழுவினர் கவுல்பாளையத்தில் இலங்கை தமிழ் மக்களுக்காக ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 72 வீடுகளின் கட்டுமான பணிகளையும், பின்னர் எளம்பலூர் சமத்துவபுரத்தில் ரூ.79.40 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பெரம்பலுார் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். திருநகரில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 1.5 ஏக்கர் அரசு நிலம் பாதுகாக்கப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டுள்ளதையும், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அமோனைட்ஸ் மையத்தினையும் சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டனர்.அதனை தொடர்ந்து அக்குழுவினர் அரசுத்துறைகளின் முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,பெரம்பலூர் மாவட்டத்தில் கனிம வளத்துறையில் பொறுத்தவரை சுமார் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாவட்ட கலெக்டரும், கனிம வளத்துறை அதிகாரிகளும் இணைந்து அந்த வருவாயை திரும்ப பெற நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதே போன்று கூட்டுறவுத்துறையில் ஒரு அலகு பராமரிப்பதற்காக ஒரு ஒப்பந்ததாரிடம் கொடுக்கின்றனர். ஒரு திட்டத்திற்கு குறிப்பாக ரூ.11 லட்சம் கொடுக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ரூ.21 லட்சம் கொடுத்து கோடிக்கணக்கில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் என்ன ஊழல் நடந்ததோ, அதே போன்று தான் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்துக்கு அரசு மருத்துவக்கல்லூரி வரும், என்றார்.






