என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழில் நிறுவனங்கள் அரசு மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
- தொழில் நிறுவனங்கள் அரசு மானியத்துடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- நிவாரண திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதா–வது :
2020 - 21 மற்றும் 2021-2022ம் நிதியாண்டுகளில் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக பொருளாதார இழப்பை சந்தித்த, தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீண்டும் தொழில்களை நிறுவிட தமிழக அரசு 2022- 23ம் ஆண்டுக்கு இரண்டு கூறுகளுடன் கோவிட் உதவி மற்றும் நிவாரண திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தின் பொழுது பாதிக்கப்பட்ட தனிநபர், உரிமையாளர் மற்றும் பங்குதாரர்கள் நிறுவனங்கள், தாங்களாகவோ அல்லது தங்களது வாரிசுகள் அல்லது பங்குதாரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட தங்கள் தொழில் நிறுவனங்களை மறுசீரமைக்கவும் அல்லது அதே தொழிலை புதிதாக ஆரம்பிக்கவும் அல்லது வேறு தொழிலினை துவங்கவும் ரூ. 5 கோடி வரையிலான திட்டங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் மானியமாக தமிழக அரசினால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் நிறுவனங்கள் பயன்பெற தகுதியுடையவை. இத்திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 முதல் 55 வயதுக்குள் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவோருக்கு தொழிற் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பத்தை மேம்படுத்துதல், நவீனமயமாக்கலை மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கோவிட் பெருந்தொற்றால் பொருளாதார வீழ்ச்சியடைந்திருந்தால் மட்டுமே மானியத்திற்கு தகுதியானவர்கள். மூலதன மானியமாக ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம். அதிகபட்சமாக ரூ.25 லட்சத்திற்கு உட்பட்டு வழங்கப்படும்.
இந்த திட்டம்2022- 23ம் ஆண்டுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்நிலையில், இந்த பிரிவுகளின் கீழ் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழக அரசு வழங்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தகுதியுடைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற்று பயனடைய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328 – 225580, 224595 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






