search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளாஸ்டிக்கை தவிர்த்து பொதுமக்கள் மஞ்சபைகளை பயன்படுத்திட வேண்டும்-  கலெக்டர் அறிவுரை
    X

    செட்டிப்பள்ளி கிராமத்தில் நடந்த கிரா சபை கூட்டத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பிளாஸ்டிக்கை தவிர்த்து பொதுமக்கள் மஞ்சபைகளை பயன்படுத்திட வேண்டும்- கலெக்டர் அறிவுரை

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சபைகளை பயன்படுத்த வேண்டும்.
    • பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி செட்டிப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறை சார்பில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    மே தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

    அதே போல கிராம வளர்ச்சி திட்டம் 2023-24 தயாரித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்க திட்ட செயல்பாடுகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான்முதல்வன் திட்டம், குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தபட வேண்டிய திட்ட பணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது மே மாதம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மாலை 2 மணி முதல் 4 மணி வரை நேரடியாக வெயில் படும் இடங்களை தவிர்க்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெயில் தாக்கம் அதிகமானால் உயர் ரத்த அழுத்தம், மயக்கம் போன்ற உடலில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதேப்போல கால்நடைகளையும் நிழலில் பராமரிக்க வேண்டும். மேலும் வரும் 15-ந் தேதி வரை நமது கிராமங்களை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மாலை 6 மணிக்கு தூய்மைப்படுத்திட வேண்டும்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சபைகளை பயன்படுத்த வேண்டும். பாலிநாயனப்பள்ளி ஊராட்சி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் தலைமையில் எங்கள் கிராமம் எழில் மிகு கிராமம் என்ற உறுதி மொழியை பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×