

கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் உழவர்சந்தையில் சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு பொதுமக்கள் காய்கறிகளை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கிச்செல்கின்றனர். இதற்காக அதிகாலை 5 மணிமுதல் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். மேலும் 10 பேருக்கு மேல் கூடினால் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் கம்பம் உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் யாருமே முககவசம் அணிவது இல்லை. கூட்டம் கூட்டமாக கடைகள் முன்பு கூடி காய்கறிகளை வாங்கிச்செல்கின்றனர்.
அங்குள்ள அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். பஸ்நிலையம், கடைவீதி போன்ற பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்படுவதை போன்று இங்கு பொதுமக்கள் அச்சமின்றி சுற்றி வருகின்றனர். எனவே அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.