என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்ற போது எடுத்த படம்.
சனி பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி
தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று வைகாசி மாத 2-வது பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி முதலில் நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்பட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தை யொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






