என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் பூங்கொடி தலைமையில் அரசு அலுவலர்கள் நேர்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கலெக்டர் பூங்கொடி தலைமையில் 'நேர்மை உறுதிமொழி' ஏற்பு
- மாவட்ட கலெக்டர் “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.
- நேர்மை உறுதிமொழி வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கலெக்டர் பூங்கொடி தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் நேர்மை உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் "நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன்.
எனவே நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும் லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும் பொதுமக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும் தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்" என நேர்மை உறுதிமொழி வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.






