தமிழக வாலிபரை தாக்கிய சம்பவம்- வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை

தமிழர்களை விட, வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.வட மாநில தொழிலாளர்கள் கூட்டமாக, தமிழக வாலிபர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக வாலிபரை தாக்கிய சம்பவம்- வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை
Published on

திருப்பூர்:

திருப்பூர் அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

தமிழர்களை விட, வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் அனுப்பர்பாளையம் - வேலம்பாளையம் செல்லும் சாலையில் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக வாலிபர் ஒருவரை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வட மாநில தொழிலாளர்கள் கூட்டமாக, தமிழக வாலிபர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பேக்கரியில், சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தபோது, வடமாநில தொழிலாளி ஒருவருக்கும், தமிழகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடமாநில தொழிலாளர், தன்னுடன் வேலை செய்யும் சக வட மாநிலத்தவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தாக்க வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து பனியன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மோதல் சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் யாரென்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com