என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- வழக்கமாக நவம்பர் மாத மத்தியில் பனிப்பொழிவு அதிகரிக்கும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.
- பனிமூட்டதால் பகலிலேயே எதிரில் நபர்கள் தெரியாத நிலை உள்ளது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்தது.அதனைதொடர்ந்து தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மலைப்பகுதியில் புதிய அருவிகள் உருவாகி எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காணப்படுகிறது. வழக்கமாக நவம்பர் மாத மத்தியில் பனிப்பொழிவு அதிகரிக்கும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளநிலையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மலை கிராமங்களில் காணப்படும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிவரை பனிமூட்டம் உள்ளது. மேலும் மாலை 4 மணிக்கே இருள்சூழ்ந்து பனிப்பொழிவு தொடங்கி விடுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஏரிச்சாலை, பஸ்நிலையம், மூஞ்சிக்கல், அப்சர்வேட்டரி சாலை என அனைத்து முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது. தற்போது மீண்டும் பள்ளிகள் தொடங்கியுள்ளதால் அடுத்த மாதம் விடுமுறையில்தான் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனிமூட்டதால் பகலிலேயே எதிரில் நபர்கள் தெரியாத நிலை உள்ளது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். பருவமழை மாற்றம் காரணமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.






